வனங்கள் பாரதிய நாகரிகத்தோடு ஒன்றியவையாகவும், நம் ஞான மரபுக்கு மிக அணுக்கமாகவும் விளங்குபவை.
வேதப் பாக்கள் வனங்களில்தான் உருப்பெற்றன. தைத்திரீயம், ப்ருஹதாரண்யகம், ஐதரேயம் – மறைகளின் மிக முக்கியமான ஆரண்யகப் பகுதிகள் (ஆரண்யகம் – காடு சார்ந்தது).
இதிகாச, புராணங்களில் வனங்கள்:
ஆரண்ய காண்டம், வன பர்வம் இரண்டுமே நம் இதிஹாஸங்களில் உள்ளவையே. இராமபிரான் அறவோருடன் இணைந்து ஸத்ஸங்கம் நடத்தியதும், அரிய அஸ்த்ரங்கள் பெற்றதும் , அரக்கரோடு பொருதியதும் அரண்ய காண்ட விவரிப்பு. பாண்டவர்கள் முனிவர்களிடம் அற நுட்பங்களை அறிந்ததும், பார்த்தன் பரமசிவனாருடன் மோதிப் பாசுபதம் பெற்றதும் வன பர்வத்தின் விவரிப்புகள்.
நைமிச வனம்,காம்யக வனம், த்வைத வனம், தண்டக வனம், மது வனம், தாருகா வனம் என்று பண்டைய வனப் பெயர்கள் நமது இதிகாச, புராணங்களில் காணக் கிடைக்கின்றன. காளிதாஸரின் புகழ்பெற்ற நாடகம் ‘அபிஜ்ஞான சாகுந்தலம்’ அரண்யத்தை மையமாகக்கொண்டு அமைந்துள்ளது.
இராமபிரானின் வனவாசம் வடக்கிலிருந்து தெற்கு நோக்கியதாக அமைந்தது. தம்மோடு அயோத்தியிலிருந்து அரணியம் நோக்கிக் கிளம்பிய ஒரு பெருங்கூட்டத்தை அண்ணல் தடுத்து நிறுத்தினார்; சுமித்ரா நந்தனரையும், மிதிலேச நந்தினியையும் அவரால் தடுக்க முடியவில்லை. தண்டக வனம் இன்றைய அமேசான் காட்டைப்போல் மிகக் கொடிய அடர்ந்த வனமாக இருந்திருக்க வேண்டும் எனத் தெரிகிறது. அச்சமின்றி, இளம் மனையாளோடு தண்டகவனம் புகும் அண்ணலை ’ஆத்மவான்’ என்றும், ’துர்தர்ஷ:’ என்றும் வால்மீகி முனிவர் வியந்து போற்றுகிறார் –